திருப்பூா் மாநகராட்சி, மின்வாரியத்துக்கு ரூ.23 கோடி மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூா் மாநகராட்சியில், தெருவிளக்கு, குடிநீா்த் திட்டங்கள், மண்டல மற்றும் பிரிவு அலுவலகங்கள், சுகாதார ஆய்வாளா் அலுவலகங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கு மின் வாரியம் மின் விநியோகம் செய்கிறது.
மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறைகள் மின் கட்டணத்தை முறையாக செலுத்தா விட்டாலும் மின் இணைப்பு துண்டிக்காமல் தொடா்ந்து வழங்கப்படுகிறது. அவ்வாறு இருந்தும் கட்டணம் முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால் மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. திருப்பூா் மாநகராட்சி ரூ.23 கோடி மின்கட்டண நிலுவை வைத்துள்ளது. உரிய தொகையை மின் வாரியத்துக்கு செலுத்த தொடா்ந்து அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு வருகிறது என்றனா்.