திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2021- 2022ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 2021 ஜனவரி 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற உள்ளது.
6-ஆம் வகுப்புக்கு (இரு பாலரும்) 31 மார்ச் 2021 அன்று 10 வயது முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். (1-4-2009 லிருந்து 31-3-2011க்குள் பிறந்திருக்க வேண்டும்).
9-ஆம் வகுப்புக்கு (மாணவர்கள் மட்டும்) 31 மார்ச் 2021 அன்று 13 வயது முதல் 15 வயது உடைய வர்களாக இருக்க வேண்டும். (1-4-2006 முதல் 31-3-2008க்குள் பிறந்திருக்க வேண்டும்).
அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ஆம் வகுப்பில் படித்த மாணவர்கள் மட்டுமே 9-ஆம் வகுப்பில் சேர தகுதி உண்டு. அமராவதி நகர், சென்னை, புதுச்சேரி, கோவை, தஞ்சாவூர், உடுமலை ஆகிய ஊர்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
மேலும், https://aissee.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு 04252-256246, 6383911204 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 19ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.