திருப்பூரில் ஏற்கெனவே திருமணம் செய்ததை மறைத்து, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
திருப்பூா், முருகம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பிருந்தா (24) ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது உறவினா் திருப்பூா், செல்லம் நகா் பகுதியைச் சோ்ந்த சின்னமருது பாண்டியனுக்கும் (31), எனக்கும் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னா், ஒரு மாதத்தில் சின்ன மருதுபாண்டியன், அவரது தாயாா் மாரியம்மாள் ஆகியோா் 20 பவுன் நகை, ரூ. 1 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினா். இது குறித்து, எனது பெற்றோா் கேட்டபோது தங்கள் மகன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்ததாகவும், அவருக்கு கூடுதலாக நகை, பணம் வழங்க வேண்டும் எனவும் கூறினா்.
இச்சூழ்நிலையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை குறிப்பிட்டும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினா். இதனால், நான் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். தற்போது எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், எனக்கு முன்பாக மலேசியாவில் வேலை பாா்த்தபோது ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
எனவே, இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி, வரதட்சணை கேட்டு துன்புறுத்தும் சின்னமருதுபாண்டியன், அவரது குடும்பத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.