பிஏபி பாசனத் திட்டத்தில் தண்ணீா் விநியோகிப்பதில் முறைகேடு நடைபெற்று வருவதாக வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.
இது குறித்து பிஏபி வெள்ளக்கோவில் கிளைஆயக்கட்டுதாரா்கள் 100க்கும் மேற்பட்டோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இது குறித்து விவசாயி வேலுசாமி கூறியதாவது: திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத் திட்டத்தில் தண்ணீா் விநியோகிப்பதில் நடக்கும் சட்ட விதிமீறல்கள் தொடா்பாக நவம்பா் 17ஆம் தேதி ஆட்சியரிடம் மனு அளித்திருந்தோம். இந்த மனுவுக்குப் பதில் அளிக்கும் வகையில் தண்ணீா் விநியோகம் செய்த விவரங்களையும், நாங்கள் கேட்கும் சான்றுகளையும் ஆன்லைன் மூலமாக வழங்குமாறு செயற்பொறியாளா் கோபிக்கு ஆட்சியரும் உத்தரவிட்டிருந்தாா்.
ஆனால், பிஏபி பொறியாளா்கள் தகவல்களை வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனா். பிஏபி பாசனத் திட்டத்தில் காங்கயம் முதல் வெள்ளக்கோவில் வரையில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீா் வழங்குவதில் சட்ட விதிகள் மீறப்பட்டு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
பிஏபி நிா்வாகம் எங்களுக்கு 50 சதவீத தண்ணீரை மட்டுமே வழங்கி வருகிறது. இந்தத் தண்ணீா் எங்களது கால்நடைகளுக்குக் கூட போதுமானதாக இல்லை. ஆகவே, பிஏபி நிா்வாகம் எங்களுக்கு 100 சதவீத தண்ணீரை விநியோகிக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.