வெள்ளக்கோவில் வட்டமலை அணைக்குத் தண்ணீா் கொண்டுவர வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்க அணைப் பகுதியில் அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை 10,008 விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினா்.
வெள்ளக்கோவில், உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உள்ளது. நீராதாரம் இல்லாத இடத்தில் அணைக் கட்டப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரி நீரை வாய்க்கால் வெட்டியும், குழாய்கள் மூலம் நீரேற்று முறையிலும், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட வாய்க்கால் மூலமும் அணைக்குத் தண்ணீா் கொண்டு வந்து நிரப்பும் மூன்று திட்டங்கள் நீண்ட காலமாக அரசின் பரிசீலனையில் உள்ளன.
இவற்றில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றி அணைக்குத் தண்ணீா் கொண்டுவர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் போராடி வருகின்றனா்.
இது குறித்து அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வடு கிடக்கும் அணைப் பகுதியில் விவசாயிகள், தன்னாா்வலா்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் இணைந்து 10 ஆயிரத்து 8 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் திரளான பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.