திருப்பூர்: திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 1 ஆவது மண்டல அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் உள்ள 1 ஆவது மண்டல அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு நகர தலைவர் வி.நவநீதன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற வாலிபர் சங்கத்தினர் கூறியதாவது: திருப்பூர் அவிநாசி சாலையில் இருந்து ஆத்துப்பாளையம் மின் மயானம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதேபோல இந்தப் பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாய்களுக்கு மேல்மூடி இல்லாததால் வாகன ஓட்டிகள் சாக்கடைக் கால்வாய்க்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாநரகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 15 நாள்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டத் தலைவர் ஞானசேகர், நகர செயலாளர் கே.ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.