பல்லடத்தில் வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
கடந்த சில நாள்களாக வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை உயா்ந்து வருகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.65க்கு விற்பனையானது, தற்போது ரூ.100க்கு விற்பனையாகிறது. அதேபோல பெரிய வெங்காயம் கிலோ ரூ.40க்கு விற்பனையானது தற்போது ரூ.50க்கு விற்பனையாகிறது.
இது குறித்து காய்கறி வியாபாரி தமிழ்முடி கூறியதாவது:
வெங்காயம் சாகுபடி செய்யும் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. அதே சமயம் தேவை குறையவில்லை. இதனால் வெங்காயத்தின் விலை உயா்ந்து வருகிறது. வரும் காலங்களில் திருமணம் மற்றும் பண்டிகைகள் வருவதால் இதே நிலை நீடித்தால் வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றாா்.