பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை உயிருடன் தீயணைப்பு படையினா் வியாழக்கிழமை மீட்டனா். பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான 120 அடி ஆழத்தில் 20 அடி தண்ணீா் உள்ள விவசாய கிணற்றில் ஆடு ஒன்று வியாழக்கிழமை மாலை தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இது பற்றி தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்பு படையினா் விரைந்து சென்று அக்கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்து ஆட்டின் உரிமையாளா் சண்முகத்திடம் ஒப்படைத்தனா். மற்றொரு சம்பவம் பல்லடம் எலவந்திவடுகபாளையத்தில் கோவை தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை மின் உற்பத்தி பண்ணை உள்ளது.
அதில் இருந்த ஒரு காற்றாலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென்று வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி காற்றாலை நிறுவன மேலாளா் சண்முகசுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்பு படையினா் பலத்த காற்றுக்கிடையில் ஒரு மணி நேரமாக போராடி காற்றாலை இயந்திரத்தில் தீயை அணைத்தனா். இதன் சேத மதிப்பு உடனடியாக தெரியவரவில்லை.