திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.60 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு மதுரை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, சித்தோடு, சின்ன தாராபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 155 விவசாயிகள் தங்களுடைய 1,396 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 69,109 கிலோ.
காங்கயம், முத்தூர், மூலனூர், நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 17 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர்.தேங்காய் பருப்புகள் கிலோ ரூ.62.30 முதல் ரூ.107.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.105.65. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.60 லட்சத்து 36 ஆயிரத்து 198 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.