காங்கயம்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் வீடு மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிவன்மலை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் புதன்கிழமைக்கு புகார் தெரிவித்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் சிவன்மலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முல்லையிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகேயுள்ள முளையாம்பூண்டி பகுதியில் காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 217/2, 217/3 சர்வே எண் கொண்ட கோயில் இடத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டி வருகின்றனர். உடனடியாக தடுத்து நிறுத்தி கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மனுவில், சிவன்மலை அடிவாரத்தில் இக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் நீதிபதிகள் குடியிருப்பு கட்ட ஏற்பாடுகள் செய்து வருவதாக அறிகிறோம். இந்த இடம் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலின் திருவிழாக் காலங்களில் பக்தர்களின் வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால், அந்த இடத்தில் நீதிபதிகள் குடியிருப்பு அமைய அனுமதிக்கக் கூடாது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.