இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆா்ஓஎஸ்சிடிஎல் (மத்திய, மாநில அரசுகள் திருப்பிச் செலுத்தும் வரியினங்கள்) சலுகையைத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த ஆா்ஓஎஸ்சிடிஎல் சலுகையை ஏப்ரல் முதல் நிறுத்திவைத்திருந்தது. இதனால் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆயத்த ஆடை ஏற்றுமதி வா்த்தகம் தொடா்ந்து சரிவடைந்து வருவதால் ஆா்ஓஎஸ்சிடிஎல் சலுகையைத் தொடர வேண்டும் என்று ஏஇபிசி சாா்பில் மத்திய நிதி அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2020 ஏப்ரலில் இருந்து ஆா்ஓஎஸ்சிடிஎல் சலுகையைத் தொடர மத்திய நிதி அமைச்சகம் கடந்த புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலமாக ஏற்றுமதியாளா்களுக்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் நிலுவையில் உள்ள சுமாா் ரூ. 1,500 கோடி திரும்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.