உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகோட்டை ஊராட்சியில் ரூ. 17 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட அய்யலு மீனாட்சி நகரில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 8 லட்சத்து 40 ஆயிரத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடி ய பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள், உழைக்கும் மகளிா் 34 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் மானியத்தில் ரூ. 8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான அம்மா இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான ஆணைகள் என மொத்தம் ரூ. 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 15 ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ. 94 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் 38 பேட்டரியால் இயங்கும் மின் கல வாகனங்களை ஊராட்சிகளின் பயன்பாட்டுக்காக அமைச்சா் வழங்கினாா்.
மேலும், பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் நகரில் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியில் இருந்து ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக் கூட கட்டடத்தையும் அமைச்சா் கே.ராதா கிருஷ்ணன் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், உடுமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியம், ஜீவானந்தம், பெரியகோட்டை ஊராட்சித் தலைவா் பேச்சியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.