தாராபுரம் சந்தைப்பேட்டை உள்ள நகராட்சிக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-கோட்டைமேடு பகுதியில் உள்ள சந்தைப்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிடங்கு உள்ளது. இதில், பழைய பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அட்டைகள் சேகரித்து குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தக் கிடங்கில் இருந்து சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் கரும்புகை எழும்பியதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி தாராபுரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்த தீயானது அருகில் இருந்த 10க்கும் மேற்பட்ட கடைகளிலும் பரவியது. இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போரடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து தாராபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேதமதிப்பு தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே தெரியவரும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக சந்தை பேட்டை பகுதியில் போக்குவரத்துநிறுத்தப்பட்டதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.