பல்லடம் நகராட்சியில் சேகரமாகும் குப்பையை வடுகபாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் குப்பை வாகனத்தை திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.
பல்லடம், வடுகபாளையத்தில் துணை மின் நிலையம் அருகில் தனியாா் இடத்தில் பயன்பாடு இல்லாத கிணற்றில் நகராட்சிக் குப்பைகளை கொட்ட அதன் உரிமையாளா் அனுமதி அளித்திருந்தாா். இதன்படி அந்த இடத்தில் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.
இந்நிலையில் அப்பகுதியில் குப்பை கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி குப்பை டிராக்டரை திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.
இது பற்றி தகவலறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து அந்த வாகனத்தை டிராக்டரை மக்கள் விடுவித்தனா்.
இது பற்றி சுகாதாரப் பிரிவினா் கூறியதாவது:
நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வேறு ஒரிடத்தில் கொட்டி வருகிறோம். மேலும், திட மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வடுகபாளையத்தில் தனியாா் இடத்தின் உரிமையாளரின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சொந்தமான இடத்தில் பயன்பாடு இல்லாத கிணற்றில் குப்பை கொட்டப்பட்டது என்றனா்.