திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1.27 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 629 விவசாயிகள் தங்களுடைய 8,325 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 26 வணிகர்கள் வந்திருந்தனர்.
2,714 குவிண்டால் வரத்து இருந்தது. விலை குவிண்டால் ரூ.4,200 முதல் ரூ.5,389 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 4,800. திருப்பூர் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தார்.
ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் தர்மராஜ், மகுடேஸ்வரன் செய்திருந்தனர்.