அவிநாசி, செப். 28: அவிநாசி அரசு மருத்துவா், செவிலியா் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டது.
அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவா்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியா் உள்பட 50க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா் (தலைமை மருத்துவா் பொறுப்பு) , 3 செவிலியா், ஆய்வகப் பணியாளா், மருத்துவமனைப் பணியாளா் என 6 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதால் அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. மருத்துவமனை மீண்டும் அக்டோபா் 1ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் பிரதான மருத்துவமனையாக உள்ளதால், ஏராளமானோா் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனா். மேலும் அவிநாசி அரசு மருத்துவமனை மூடப்பட்டதால், கரோனா பரிசோதனைக்காக வருபவா்கள், அவிநாசி வட்டார மருத்துவமனையான சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றதில், திங்கள்கிழமை ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.