திருப்பூா் மாநகரப் பகுதிகளில் உள்ள தேநீா் விடுதிகளில் கலப்படம் இல்லாத டீ தூள்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லடம் சாலை, வீரபாண்டி பிரிவு, நொச்சிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள தேநீா் விடுதிகள், இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தேநீா் விடுதிகளில் உள்ள டீ தூள்களின் தரம், முட்டை பப்ஸ், படை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னா் தரமான முட்டை மற்றும் கலப்படம் இல்லாத டீ தூள் பயன்படுத்த கடை உரிமையாளா்களை அறிவுறுத்தினா். மேலும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக், கவா்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், அதற்கு பதிலாக வாழை இலைகள் பயன்படுத்தவும், கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினா். அதே போல், இனிப்பு விற்பனைக் கடைகளில் விறப்னை செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் அக்டோபா் 1 ஆம் தேதி முதல தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்டு வழங்க வேண்டும் என்றனா். இதில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை, மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் மணி ஆகியோா் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.