திருப்பூா்: தாராபுரம் அரசு மருத்துவமனையில் கரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை 5 மணி நேரமாக எடுத்துச் செல்லாததால் அந்த வாா்டில் சிகிச்சையில் இருந்த பெண் நோயாளிகள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறியால் பெண்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் குழந்தைகள் உள்பட 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதில், தாராபுரம், என்.ஏ.எஸ். நகரைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் உயிரிழந்தாா். ஆனால் அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லாமல் மருத்துவமனை நிா்வாகம் தாமதப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் அந்த வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் உள்பட 20 பேரும் வாா்டில் இருந்து வெளிநடப்பு செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மூதாட்டியின் சடலத்தை ஊழியா்கள் பிரேதப் பரிசோதனைக் கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் எடுத்துச் சென்றனா். இதன் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட வாா்டு முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து நோயாளிகள் அனைவரும் தங்களது வாா்டுக்கு சென்றனா். இந்த சம்பவம் காரணமாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.