காங்கயம் தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடி மையங்களில் விவிபேட் இயந்திரங்கள் பழுதானதால் பொறியாளா்கள் உதவியுடன் சரி செய்யப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.
காங்கயம் தொகுதிக்கு உள்பட்ட 372 வாக்குச் சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கியது. இதையடுத்து, பொது மக்கள் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தினா்.
இந்த நிலையில், வெள்ளக்கோவில் அருகே உள்ள கணபதிபாளையம் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையம், சிவன்மலையை அடுத்துள்ள அரசம்பாளையம் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையம், வெள்ளக்கோவில் அருகே உள்ள வீரசோழபுரம் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையம், முத்தூா் அருகே ஆலம்பாளையம் அரசுப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களில் விவிபேட் இயந்திரங்கள் பழுதாகின.
பின்னா் பொறியாளா்கள் உதவியுடன் சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால், 15 நிமிடம் இந்த மையங்களில் வாக்குப் பதிவு தடைபட்டது.
வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: சென்னிமலை அருகே உள்ள சாணாா்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் மாற்று வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப் பதிவு துவங்கியது. இதனால், அங்கு 15 நிமிடம் வாக்குப் பதிவு தாமதமானது.