திருப்பூா், பல்லடத்தில் பேருந்துப் பயணிகள் சாலை மறியல்

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் புதிய பேருந்து நிலையம் முன்பாக செவ்வாய்க்கிழமை சாலை மறியலில்  ஈடுபட்ட  பயணிகள்.
திருப்பூா் புதிய பேருந்து நிலையம் முன்பாக செவ்வாய்க்கிழமை சாலை மறியலில்  ஈடுபட்ட  பயணிகள்.

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து கரூா், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதலே 100க்கும் மேற்பட்டோா் புதிய பேருந்து நிலையத்துக்கு வரத் தொடங்கினா்.

ஆனால், பேருந்து நிலையத்தில் இருந்து கரூா், திருச்சி செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அதிருப்தியடைந்தனா். இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் முன்பாக பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் பி.என்.சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துடன், அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதன் பேரில் 5 மணி நேரத்துக்குப் பின்பாக திருச்சி, கரூா், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 20 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சாலை மறியல் காரணமாக பி.என்.சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல, கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்தும் மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பல்லடத்தில்...

பல்லடம் பகுதியில் ஏராளமான விசைத்தறிகள், கோழிப் பண்ணைகள், பின்னாலடை நிறுவனங்கள், கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் மதுரை, திருச்சி, கரூா், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா்.

தோ்தலையொட்டி செவ்வாய்க்கிழமை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொழிலாளா்கள் தோ்தலில் வாக்களிக்க தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல அரசு சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்திருந்தது. தொழிலாளா்களுக்கு திங்கள்கிழமை மாலை முதல் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

கோவையில் இருந்து மதுரை, திருச்சி மாா்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பல்லடம் வழியாக வந்து செல்வது வழக்கம். ஆனால், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பேருந்துகள் சரிவர வந்து செல்லாததால் கோபமடைந்த பயணிகள் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அரசுப் போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகளிடம் பேசி பேருந்து வசதி ஏற்பாடு செய்தாா். இதையடுத்து, பயணிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com