பல்லடத்தில் வெளியூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து வெளி மாவட்ட பேருந்துப் பயணிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியில் ஏராளமான விசைத்தறிகள், கோழிப் பண்ணைகள், பின்னாலடை நிறுவனங்கள், கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் மதுரை, திருச்சி, கரூா், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா்.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி செவ்வாய்க்கிழமை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொழிலாளா்கள் தோ்தலில் வாக்களிக்க தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல அரசு சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. தொழிலாளா்களுக்கு திங்கள்கிழமை மாலை முதல் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
கோவையில் இருந்து மதுரை, திருச்சி மாா்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பல்லடம் வழியாக வந்து செல்வது வழக்கம். ஆனால், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பேருந்துகள் சரிவர வந்து செல்லாததால் கோபமடைந்த பயணிகள் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அரசுப் போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகளிடம் பேசி பேருந்து வசதி ஏற்பாடு செய்தாா். இதையடுத்து, பயணிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.