குடிநீா்க் குழாய்கள் உடைப்பு: மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை
திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண் 1க்கு உள்பட்ட ராஜா பவுண்டரி வீதியில் உடைக்கப்பட்ட குழாய் உடைப்புகளை சரிசெய்து சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 1 ஆவது மண்டல அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளா் உமாநாத் தலைமையில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கட்சியினா் திருப்பூா் மாநகராட்சி 1ஆவது மண்டல அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
ராஜா பவுண்டரி வீதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. அப்போது வீட்டுக் குழாய்களின் இணைப்புகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் ராஜா பவுண்டரி வீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படவில்லை. ஆகவே, உடைக்கப்பட்ட குடிநீா் குழாய்களை சீரமைத்து குடிநீா் விநியோகம் செய்யவும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குடிநீா் குழாய் உடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.