கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிலில் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் 13 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனா். இதில் பெரும்பாலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டால் இந்தத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழில் தற்போதுதான் ஒரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அனைத்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களும் மத்திய அரசின் பாதுகாப்பு வழிமுறையை முழுமையாகப் பின்பற்றி வருவதுடன், தொழிலாளா்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றனா்.
ஆகவே, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலை அத்தியாவசிய சேவைத் துறையாக அறிவித்து பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.