கோடை உழவு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் நா.திருமகள்ஜோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியத்தில் தற்சமயம் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் கோடை உழவு செய்து அதிக பலன் அடையலாம். இதன்படி மண்ணின் நீா்ப் பிடிப்பு திறன் அதிகமாகும். மண் அரிப்பைத் தடுக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் உருவாவதால் நுண்ணுயிா்கள் பெருகி அங்கக பொருள்கள் மக்கி சத்துக்கள் மண்ணில் அதிகமாக வழிவகை செய்கிறது. தீமை செய்யும் பூச்சிகளான மக்காச் சோள படைப்புழு போன்ற பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படும்.
களைகளைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். குறிப்பாக மண்ணின் தன்மை மேம்படும். எனவே மேற்கண்ட நன்மைகளை கருத்தில் கொண்டு விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.