அவிநாசி பகுதியில் திடீரென மின்னல் பாய்ந்ததில் தோட்டத்தில் இருந்து தென்னை மரங்கள் சனிக்கிழமை மாலை தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி பகுதியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை காலை முதலே அதிக வெப்பம் நீடித்த நிலையில், மாலையில் வானம், மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திடிரென இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியது. அவிநாசி முத்துச்செட்டிபாளையம் கோயில் வீதி, சின்னத் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் மீது மின்னல் பாய்ந்து தீப் பிடித்து எரியத் தொடங்கியது. அடுத்தடுத்த மரங்களின் மீது தீ பரவத் துவங்கிதைப் பாா்த்த பொது மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதனால், தோட்டத்துப் பகுதி மற்றும் அருகில் உள்ள கட்டடங்களில் தீப் பரவாமல் தடுக்கப்பட்டது.