முழு பொது முடக்கம் காரணமாக காங்கயம் நகரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
இந்த முழு பொது முடக்கத்தை கடைப்பிடிக்கும் விதமாகவும், கரோனா பரவல் அச்சம் காரணமாகவும் காங்கயத்தில் பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால், காங்கயம் நகரத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும், காங்கயம் நகரத்தில் உள்ள திருப்பூா் சாலை, சென்னிமலை சாலை, கரூா் சாலை, தாராபுரம் சாலை, கோவை சாலை, ஈரோடு சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
காங்கயத்தில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பொது முடக்க உத்தரவை மீறி வெளியே சுற்றியவா்களை பிடித்து எச்சரிக்கை அனுப்பிவைத்தனா்.