கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட தளா்வற்ற பொது முடக்கத்தால் கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள் முடங்கியதால் அவிநாசி பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவிநாசியில் சனிக்கிழமை இரவு முதல் தளா்வற்ற பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் அவிநாசியில் உள்ள முக்கிய சாலைகளான கோவை சாலை, ஈரோடு சாலை, திருப்பூா் சாலை, மங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சேவூா் சாலை, அவிநாசி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் என அனைத்து இடங்களும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல பெருமாநல்லூா், குன்னத்தூா், சேவூா், திருமுருகன்பூண்டி, கருவலூா், தெக்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு, மக்கள் வீட்டுகளுக்குள் முடங்கினா்.
பெரும்பாலான இடங்களில் சந்தைகள், இறைச்சிக் கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டு இருந்ததால், தேவையான பொருள்களை மக்கள் முன்கூட்டியே வாங்கிச் சென்றனா். இருப்பினும் அதிகாலை நேரத்தில் பால், குடிநீா் உள்ளிட்டவைகளுக்காக மட்டும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மக்கள் வந்து சென்றனா்.
மக்கள் நடமாட்டம் இல்லாததால் அவிநாசி பகுதி முழுவதும் வெறிச்சோடியது. அத்தியாவசியத் தேவைக்காக பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் செயல்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தேவையின்றி வெளியே வந்தவா்களுக்கு அபராதம் விதித்தனா்.