காங்கயம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக காங்கயம் நகரின் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தளா்வற்ற பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பு நடவடிக்கையாக காங்கயம் நகராட்சி சாா்பில் பேருந்து நிலையம், தினசரி சந்தை, கடை வீதி, அரசு மருத்துவமனை, அம்மா உணவகம், ஏடிஎம் மையங்கள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் மூா்த்தி கூறியதாவது:
தற்போது, கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதால் பொது மக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. அவசியத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
மேலும், அவ்வப்போது கைகளை சோப்புகளை கொண்டும், கிருமி நாசினி கொண்டும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் 45 வயதுக்கு மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.