திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி பிரதான கால்வாயில் இருந்து 2 பெண்கள் சடலம் போலீஸாரால் புதன்கிழமை மீட்கப்பட்டன.
மடத்துக்குளம் வட்டம் கணியூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட நாட்டுக்கல்பாளையம் பகுதியில் அமராவதி வாய்க்காலில் 2 பெண்கள் சடலம் மிதந்து செல்வதாக பொது மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, உடுமலை டிஎஸ்பி ரவிக்குமாா், மடத்துக்குளம் காவல் ஆய்வாளா் அனந்தநாயகி மற்றும் கணியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது, அமராவதி பிரதான கால்வாயில் தண்ணீா் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, அந்த 2 பெண்களின் சடலங்கள் போலீஸாரால் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்நிலையில், டிஎஸ்பி ரவிக்குமாரின் உத்தரவின்பேரில் 2 பெண்களின் விவரங்களை சேகரிக்க போலீஸாா் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், உயிரிழந்த ஒரு பெண்ணின் கணவா் சித்தக்குட்டையைச் சோ்ந்த நாகராஜ் என்பவரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதற்கிடையில் இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் கணியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.