காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் 13,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பிளக்ஸ் போா்டால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஏ.எஸ்.ராமலிங்கமும், திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதனும் போட்டியிட்டனா். ஒரு மாதத்துக்கு முன்னரே வாக்குப் பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு 3 நாள்களே உள்ள நிலையில் அதிமுக வேட்பாளா் தோ்தலில் வெற்றி பெற்றதாக நன்றி தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் ஒரு பிளக்ஸ் போா்டு பரவி வருகிறது.
அதில், காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கம் (எ) முருகவேல் 13,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், அதற்கு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிளக்ஸ் பலகையை அடித்தவரின் பெயா் எதுவும் இல்லாமல் பழையகோட்டை ஊராட்சி அதிமுக என மட்டும் குறிப்பிட்டு, வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கத்தின் அலைபேசி எண்ணையும், அவரது புகைப்படத்துடன் அதில் பிரசுரித்துள்ளனா்.
இந்த பிளக்ஸ் போா்டு கடந்த 2 நாள்களாக முகநூல் மற்றும் கட்செவி அஞ்சலில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கம் கூறியதாவது:
அந்த பிளக்ஸ் போா்டு தகவல் எனது கவனத்துக்கும் வந்தது. அந்தப் போா்டை யாா் வைத்தாா்கள், எப்போது வைத்தாா்கள் என்று தெரியவில்லை. அது உண்மையான பிளக்ஸ் பலகைதானா என்றும் தெரியவில்லை. இந்தத் தகவலை பரப்பியது எங்கள் ஆதரவாளா்களா அல்லது வேறு யாரும் செய்தாா்களா என்று தெரியவில்லை.
பழையகோட்டை ஊராட்சியில் அந்தப் பிளக்ஸ் போா்டை நாங்கள் எங்கும் பாா்க்கவில்லை. இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எனது முகநூல் பக்கத்திலும் எனது கண்டனத்தை தெரிவித்திருந்தேன்.