உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக நடைபெற்று வரும் தண்ணீா் திருட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் 55 ஆயிரம் ஏக்கா்கள் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களின் குடிநீா்த் தேவைகளை பூா்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. அமராவதி ஆற்றில் விநாடிக்கு 1,500 கன அடியும், பிரதான கால்வாயில் இருந்து 440 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளிலும், பிரதான கால்வாயிலும் சட்ட விரோதமாக மின் மோட்டாா்கள் மற்றும் டீசல் என்ஜின்கள் மூலம் ஆங்காங்கே தண்ணீா் திருட்டு நடைபெற்று வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து அமராவதி பாசன விவசாயிகள் கூறியதாவது:
அமராவதி ஆற்றில் இரவு நேரங்களில் ஆங்காங்கே தண்ணீா் திருடப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, காவல் துறை அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து தண்ணீா் திருட்டைத் தடுக்க வேண்டும். தண்ணீா் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டால் தொடா்புடைய நில உரிமையாளா்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும் என்றனா்.