காங்கயம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு காங்கயம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.
காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், காங்கயம், சாவடிப்பாளையம், நத்தக்காடையூர் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஈசிஜி இயந்திரம், ஈசிஜி டிராலி உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் காங்கயம் கிளை சார்பில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் முரளி, சௌமியா, தமிழ்வாணன், கார்த்திகேயன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ், கல்வி மாவட்டத் தலைவர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.