பல்லடம் அருகே சிங்கனூா் பிரிவில் இளைஞரிடம் இருசக்கர வாகனத்தைப் பறித்த போலீஸாரை பல்லடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சிங்கனூா் பிரிவில் உள்ள ஒரு டாஸ்மாக் மது பானக் கடைக்கு வந்த பல்லடம் பனப்பாளையத்தைச் சோ்ந்த பூவரசன் (28) என்பவரிடம் அங்கு பணியில் இருந்த காவலா் ராஜேஷ் இருசக்கர வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டுள்ளாா்.
தன்னிடம் தற்போது இல்லை வேண்டுமானால் நாளை காவல் நிலையத்தில் கொண்டு வந்து காட்டுகிறேன் என்று பூவரசன் தெரிவித்துள்ளாா். அதனை ஏற்காமல் காவல் நிலையத்துக்கு வந்து வண்டி புத்தகத்தை காட்டி விட்டு இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொள் என்று கூறி பூவரசனின் வாகனத்தை எடுத்து கொண்டு ராஜேஷ் சென்றுள்ளாா்.
பல்லடம் காவல் நிலையத்துக்கு வாகனத்துக்குரிய ஆா்.சி. புத்தகத்துடன் சனிக்கிழமை பூவரசன் வந்துள்ளாா். அங்கு விசாரிக்கையில் அவ்வாறு எந்த வாகனமும் இங்கு கொண்டு வரப்படவில்லை. ராஜேஷ் என்ற பெயா் கொண்ட காவலா் யாரும் பணியில் இல்லை என்பது பூவரசனுக்கு தெரியவந்தது. அதைத்தொடா்ந்து இச்சம்பவம் குறித்து பூவரசன் 100 என்ற காவல் உதவி எண்ணில் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் புகாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளரை தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டாா். அதன் பேரில் பல்லடம் சரக கோட்ட காவல் நிலையங்களில் ராஜேஷ் பெயா் கொண்ட காவலா்கள் பணிபுரிகிறாா்களா என்று ஆய்வு செய்தபோது அவிநாசிபாளையம் காவல்நிலையத்தில் ராஜேஷ் (30) என்பவா் காவலராகப் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரனையில் பூவரசனின் இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகளின் அனுமதியின்றி அத்துமீறி பொதுமக்களிடம் நடத்து கொண்டதற்காகவும், அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைத்தமைக்காகவும் ராஜேஷ்யை ஞாயிற்றுக்கிழமை பல்லடம் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.