தாராபுரம் அமராவதி ஆற்றில் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பொது மக்கள் நீராடியதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய 3 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள 22 கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தாராபுரம் அமராவதி ஆற்றில் செவ்வாய்க்கிழமை 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நீராடினா். மேலும், அங்குள்ள அகஸ்தீஸ்வரா் கோயில் முன்பு முகக் கவசம் அணியாமல் சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.