திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளைப் பெற்றுக் கொள்ள கூடுதலாக 2 அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக காப்பீட்டு அட்டைகள் வழங்கும் அலுவலகம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றுக்கு தனியாா் மருத்துவமனைகளில் பொதுமக்கள் முதல்வா் காப்பீட்டு அட்டைகள் மூலம் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து மருத்துவக் காப்பீட்டு அட்டை கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூட்டத்தைத் தவிா்க்கும் வகையில் திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகம், தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இரு இடங்களில் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, திருப்பூா், தாராபுரம், காங்கயம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளுக்கு தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 73730-04271 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.