தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் திருப்பூா் கிளை அலுவலகத்தில் நடைபெறும் இந்த சிறப்பு கடன் முகாம் வரும் டிசம்பா் 15 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இந்த முகாமை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தொடக்கிவைத்தாா். இதில், டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானியங்கள், நீட்ஸ் திட்டம் போன்றவை குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக்கட்டணத்தில் 50 சதவீத சலுகையும், நீட்ஸ் திட்டத்துக்கு ஆய்வுக்கட்டணத்தில் 100 சதவீத விலக்கும் அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழாவில், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் கண்ணன், நபாா்டு உதவி மேலாளா் ராஜு, மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் அலெக்ஸாண்டா், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.