திருப்பூரில் தனியார் பள்ளி சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்தவரைக் கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
திருப்பூர் பூலுவபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆரம்பக் கல்வி படிக்கும் குழந்தை அடையாளம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மக்களும் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | சென்னை விமான நிலையத்தில் ரூ.61.37 லட்சம் தங்கம் பறிமுதல்
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தாயார், பள்ளி வளாகத்தில் தனது மகளை அடையாளம் தெரியாத நபர் தகாத முறையில் தொட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டதில் சிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது
மேலும் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதை உறுதி செய்வதற்காக விஷாகா வழக்கில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் கோரப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அரசு வகுத்துள்ள மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உள்ளிட்டவற்றை உறுதி செய்யக் கோரியுள்ளதுடன் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.