தாராபுரத்தில் சிறு வியாபாரிகளிடம் சுங்க வரி வசூலிப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் வெள்ளரி, தண்ணீா் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளிடம் சிலா் ரசீது கொடுத்து ரூ.50 பணம் வசூலிக்கின்றனா்.
அதேபோல, பேருந்து நிலையத்துக்கு வெளியிலும் கடைவீதிகளிலும் சாலையோர வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகளிடமும் அதே ரசீதைக் கொடுத்து பணம் வசூலிக்கின்றனா். ஆனால், அந்த ரசீதில் நகராட்சி ஆணையரின் கையொப்பம், வசூலிப்பவா் பெயா், தேதி ஆகியவை குறிப்பிடவில்லை.
இது தொடா்பாக வியாபாரிகள் கேட்டால் முறையாகப் பதில் தெரிவிக்காமல், மிரட்டல் விடுக்கின்றனா். ஆகவே, இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் உரிய விசாரணை நடத்தி முறைகேடாக சுங்க வரி வசூலிக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.