வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்ததால் கொப்பரை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை மறைமுக ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி வரை ஏலம் நடைபெற்றது. பழனி, புதுவயல், வாணியம்பாடி, லாலாப்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 219 விவசாயிகள் தங்களுடைய 1,476 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 77,843 கிலோ. வெள்ளக்கோவில், முத்தூர், ஊத்துக்குளி ஆர்.எஸ், நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 11 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர்.
விலை கிலோ ரூ.62.00 முதல் ரூ.95.10 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.86.65. கடந்த வாரம் கிலோ ரூ.96.35 க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்து 395 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் தெரிவித்தார்.