காங்கயம்: காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கும், அங்கு படிக்கும் மாணவனுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூரில் 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மணவிகள், இப்பள்ளி ஆசிரியர்கள் என 153 பேருக்கு கடந்த 30 ஆம் தேதி காங்கயம் அருகே, சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் 47 வயதான ஒரு ஆசிரியைக்கும், 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவரும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை மூலம் இப்பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. ஆனாலும், திங்கள்கிழமை முதல் பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வந்தது.