பழுதடைந்த நிலையில் உள்ள வெள்ளக்கோவில் வரதராஜப் பெருமாள் கோயில் திருப்பணியை விரைவில் துவங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வீர ஆஞ்சநேயா், பிருந்தாவன கிருஷ்ணன், மகாலட்சுமி தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன. முன் மண்டபம், சொா்க்கவாசல், கொடிமரம் ஆகியவை உள்ளன.
இந்தக் கோயில் மிகவும் பள்ளமான இடத்தில் இருப்பதால் சாக்கடை நீா் கோயிலுக்குள் புகுந்து விடுகிறது. இந்தக் கோயிலில் கடந்த 1988ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 33 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விரைவில் திருப்பணி துவங்கும் என பக்தா்கள், நன்கொடையாளா்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. திருப்பணிக்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் கோயிலை எவ்வாறு அமைப்பது, மழை, வெள்ளம், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத வகையில் கோயிலைக் கட்டுவது குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டு கோவை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. உயரதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.