காங்கயம்: காங்கயத்தில் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவு நீரை அகற்றாததால், நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த முடியாது எனத் தெரிவித்து, இப்பகுதி மக்கள் வியாழக்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம் நகர், 5 ஆவது வார்டுக்கு உள்பட்ட, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ராஜாதி வீதி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாக்கடையில் கழிவுநீர் வெளியேறாமல், குளம் போல் தேங்கி நின்று, சுகாதார சீர்கேட்டினை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தினமணி நாளிதழிலும் பலமுறை செய்தி வெளியானது.
இந்நிலையில், ராஜாஜி வீதியில் குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவு நீரை நகராட்சி நிர்வாகம் அகற்றாததைக் கண்டித்து, இப்பகுதி மக்கள் வியாழக்கிழமை மாலை காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாக்கடை கழிவு நீரை அகற்றாததால், நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்த மாட்டோம், என முழக்கங்களை எழுப்பினர்.