திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 11 குழந்தைத் தொழிலாளா்களை காவல் துறையினா் மீட்டுள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் குழந்தைத் தொழிலாளா்கள் மற்றும் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்க தனிக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவானது மாவட்ட பெண்கள் மற்றும் குற்றத் தடுப்பு கூடுதல் காவல் கணிகாணிப்பாளா் வேல்முருகன் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி தலைமையில் குழந்தைகள் நலப் பிரிவு அலுவலா், தொழிலாளா் நலத் துறை அலுவலா்களுடன் இணைந்து பிப்ரவரி 1 முல் 15 ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
இதில், 11 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டதுடன், பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையும் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழும உத்தரவின்படி அன்னூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனா்.
மேலும், திருப்பூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகளில் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த 5 வழக்குகளும், இளஞ்சிறாா் சம்பந்தப்பட்ட 10 வழக்குகளும் கோப்புக்கு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.