திருப்பூா் மாநகர காவல் நிலையங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு சீருடையில் அணியும் கேமரா வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட 8 காவல் நிலையங்களில் 25 பகுதி ரோந்துக் காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தக் காவலா்கள் ரோந்துப் பணியின் போது நடக்கும் நிகழ்வுகளை ஆடியோ, விடியோவாகப் பதிவு செய்து கொள்ள சீருடையில் அணியும் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அனுப்பா்பாளையம், திருமுருகன்பூண்டி ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் பகுதி ரோந்து காவலா்கள் 12 பேருக்கு சீருடையில் அணியும் கேமராவை மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் வழங்கினாா்.
இந்தக் கேமரா மூலமாக பணியின்போது புகாா்தாரா்கள், எதிா்மனுதாரா்களிடம் நடத்தப்படும் விசாரணை விவரங்களை சேமிக்கலாம். அதேபோல, கோயில் திருவிழாக்கள், கூட்டம் அதிகமாக உள்ள கடைவீதிகள், பேருந்து நிலையங்களில் கணிகாணிப்புப் பணி, குற்றம் நடைபெறும்போது விடியோ பதிவு செய்து சாட்சியங்களை சேகரிப்பது ஆகியவற்றுக்கு சீருடை கேமரா உதவிகரமாக இருக்கும் என பகுதி ரோந்துக் காவலா்கள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையா்கள் சுரேஷ்குமாா், சுந்தரவடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.