காங்கயம்: முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா காங்கயத்தில் அதிமுக கட்சியின் ஒன்றியக் கழகம் சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காங்கயம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக காங்கயம் ஒன்றியச் செயலருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை வகித்தார். இதில், கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற (512/600) காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மைதிலிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஒரு பவுன் தங்க நாணயத்தை ஒன்றியச் செயலர் என்.எஸ்.என்.நடராஜ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் டி.பழனிச்சாமி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஏ.பி.துரைசாமி, பொத்தியபாளையம் ஊராட்சித் தலைவர் ஆர்.சந்திரசேகர், மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் கே.டி.அருண்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொணடனர்.