திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தாராபுரம், சா்ச் சாலையில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் மருத்துவமனையின் 3ஆவது தளத்தில் உள்ள மருத்துவரின் வீட்டில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகத் தரப்பிலிருந்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு விரைந்து சென்று சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
எனினும் இந்த தீ விபத்தில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மருத்துவரின் அறையில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி. டிவியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.