திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தொழில் போட்டி காரணமாக பெண்ணைக் காரை ஏற்றிக் கொலை செய்த மளிகைக் கடை உரிமையாளரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து குண்டடம் காவல் துறையினர் கூறியதாவது: தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்துள்ள தும்பளபட்டியைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் மயில்சாமி(38), இவர் அதே பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் கருப்புசாமியின் மனைவி லட்சுமி(50) என்பவரும் மளிகைக் கடை நடத்தி வந்தார.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தொழில் போட்டி ஏற்பட்டு வந்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், லட்சுமி மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் குண்டடம் வாரச்சந்தைக்குச் சென்றுள்ளார். இதன் பிறகு ஊர் லட்சுமி இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
இவரது வாகனம் தாராபுரம்-கோவை சாலை ருத்ராவதி அருகே வந்து கொணடிருந்தபோது பின்னால் வந்த மயில்சாமியின் கார் லட்சுமியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்,லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, மயில்சாமி தானாகச் சென்று குண்டடம் காவல் நிலையத்தில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக நாடகமாடியுள்ளார்.
இதனிடையே, மயில்சாமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், தொழில்போட்டி காரணமாக மயில்சாமி காரை ஏற்றி லட்சுமியைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மயில்சாமியைக் கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.