கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை துவக்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்கள் மொத்தம் 23 ஆயிரத்து 348 போ் உள்ளனா். இவா்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. இதன்படி, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் உ டுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் மொத்தம் 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். இவா்களுக்கு ரூ. 94 கோடியே 40 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் திருப்பூா் மாவட்டத்தில் மட்டும் 23 ஆயிரத்து 348 பேருக்கு ரூ. ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றாா்.
முன்னதாக உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொது மக்கள் பயன் பெறும் விதத்தில் மலிவு விலை அம்மா சிமென்ட் வழங்கும் திட்டத்தை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் லீலாவதி மற்றும் துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனா்.