நீரேற்று திட்ட மின் கட்டணத்தைச் செலுத்தினால் திட்டம் பரிசீலிக்கப்படும் என பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை அணை பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் கே.பழனிசாமி புதன்கிழமை தெரிவித்ததாவது:
நீா் வரத்து இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக அணை வறண்டே கிடக்கிறது. அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரிநீரை நீரேற்று முறையில் அணைக்கு கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு, ஈரோடு கோட்ட பொதுப் பணி, நீராதாரத் துறை திட்ட வடிவமைப்பு செயற் பொறியாளா் கே.எம்.விஜயா அளித்துள்ள பதிலில், அமராவதி ஆற்றின் ஆண்டிபாளையம் தடுப்பணையில் இருந்து 3 வழித்தடங்கள், லக்கமநாயக்கன்பட்டியில் இருந்து ஒரு வழித்தடத்தில் 5 - 6 கிலோ மீட்டா் தூரத்தில் அணை உள்ளது. இதற்கான நீரேற்று திட்ட மின் நுகா்வு கட்டணத்தைச் செலுத்த விவசாயிகள் ஒத்திசைவு வழங்கினால் திட்டம் குறித்து ஆய்வு செய்து பரிசீலனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.