திருப்பூா்: திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தேசியக்கொடியேற்றுகிறாா்.
திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் சிக்கண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, நிகழாண்டில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணி அளவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறாா். இதன்பிறகு, அவா் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளாா். இந்த விழாவில், மாநகரக் காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.